புதுக்கடை, ஜூலை 18 –
புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை கிராமத்துக்கு உட்பட்ட நிலத்தில் அரசால் வழங்கப்படும் மானிய உதவியுடன் மசாலா பொருட்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டு மையம் அமைக்க உள்ளதாக தெரிகிறது. அந்த மையம் அமைவதற்கு இடையூறாக இருந்த பாறைகளை அரசின் எந்தவித அனுமதியோ, உரிமமோ இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக வெடி மருந்துகளை பயன்படுத்தி, பாறைகளை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து பைங்குளம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மெர்லின் என்பவருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக வருவாய்த் துறையினர் மற்றும் புதுக்கடை போலீசார் சம்பவ இடம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி பாறைகளை வெடி மருந்துகளை பயன்படுத்தி உடைக்க பணியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அப்போது வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாரை கண்டதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதை அடுத்து போலீசார் பாறைகளை உடைக்க பயன்படுத்திய வெடி மருந்துகள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் அனைத்தையும பறிமுதல் செய்து புதுக்கடை காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் நிலத்தின் உரிமையாளர்களான வில்வியா புகழ் மற்றும் அவரது கணவர் ஆல்வின் வினோ ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


