களியக்காவிளை, ஜன. 27 –
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் களியக்காவிளையை அடுத்த தையாலுமூட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அஜய் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது: தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கியதால் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. பாஜக அரசின் நோக்கம் காங்கிரஸ் கொண்டு வருகின்ற திட்டங்களை அவர்கள் கொண்டு வந்ததாக காட்ட வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். இந்தத் திட்டத்தின் பெயரை விபி ஜி ராம் எனக் கொண்டு வந்துள்ளனர். எதற்காக இந்த பெயரை வைத்துள்ளார்கள் என யாருக்கும் தெரியாது. மகாத்மா காந்தி அவர்களுடைய பெயரை நீக்க வேண்டும். இந்தத் திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் மத்திய பாஜக அரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ரத்தினகுமார், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெயசிங், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பால் ஜெபசிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



