நாகர்கோவில், ஜூன் 22 –
வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேல முட்டம், அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் அனீஸ் ஜெர்பின். இவருக்கு சொந்தமான பைபர் படகில் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த ராஜன் என்பவருடன் சில மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன்களை பிடித்து விட்டு அவர்கள் துறைமுகம் திரும்பினார். முட்டம் துறைமுகத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் படகு கடலில் வரும்போது அதில் வந்த ராஜன் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை போராடி மீட்டனர். பின்னர் அவரை கரைக்கு கொண்டு வந்து அவரை சிகிச்சைக்காக குமாரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து படகின் உரிமையாளர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


