தேனி, மே 29 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் (29.05.2026) நடைபெற்றது. மாவட்டத்தில் மே மாதம் வரை ஆண்டு மழையளவான 276.6 மி.மீ-க்கு தற்பொழுது வரை 200.03 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது மே மாதம் வரை ஆண்டு இயல்பான மழையளவில் 76.57 மி.மீ குறைவாகும். மே 2026 மாதத்திற்கான இயல்பு மழையளவான 64.5 மி.மீ-க்கு தற்பொழுது வரை 88.06 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது மே மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 23.56 மி.மீ அதிகமாகும்.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் 380 ஹெக்டர் பரப்பிலும், சிறுதான்யம் 54 ஹெக்டர் பரப்பிலும், பயறு வகைகள் 115 ஹெக்டர் பரப்பிலும், தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள் 7366 ஹெக்டர் பரப்பிலும், காய்கறி பயிர்கள் 146 ஹெக்டர் பரப்பிலும், மலைத்தோட்ட பயிர்கள் 11044 ஹெக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1738 ஹெக்டர் பரப்பிலும், மலர்ப்பயிர்கள் 525 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 71 மெ.டன்னும், சிறுதானியங்கள் 6 மெ.டன்னும், பயறு வகை விதைகள் 9 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 1.2 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. துவரை பயிரானது நடவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாகுபடி செய்யும் பொழுது மகசூல் அதிகரிக்கும் என ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, நடப்பாண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடவு தொழில்நுட்பம் மூலமாக துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 10,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் கௌரவ நிதி பெரும் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 26050 பயனாளிகளில் இதுவரை 23,550 பயனாளிகள் மட்டுமே விவசாய அடையாள எண் பெற்றுள்ளார்கள். மீதமுள்ள பிற விவசாயிகளும் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய உடனடியாக விவசாய அடையாள எண்ணை பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் 15 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என்றும், டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்கள் அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்கப்படும் என்றும், உரங்களின் விலை கூடுதலாக விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய பதிலினை விவசாயிகளுக்கு வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், உதவி வன பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு) திருமதி நர்மதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) இரா.வளர்மதி, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



