கிருஷ்ணகிரி, ஜன. 21 –
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2026 முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 01.01.2026 முதல் 31.01.2026 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடித்தல், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று (21.01.2026) நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொதுமக்கள் விபத்தினை தவிர்க்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலைக் குறியீடுகளையும் விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுத்திட முடியும். வாகனத்தை பயன்படுத்தும் போது கை பேசியை பயன்படுத்தக்கூடாது. அதேப்போல அபாயகரமாக வாகனத்தை இயக்க கூடாது. குறிப்பாக மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
அதே போல், குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்தக் கூடாது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும். மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்ப கூடாது. சாலையில் சாகசங்கள் செய்யக் கூடாது. எனவே, பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், தலைகவசம் அணிந்து வராத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய தலைகவசங்களை வழங்கி இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திருலோகசுந்தர், உதவி கோட்டப்பொறியாளர்கள் அன்புஎழில், முருகன், சரவணன், கவிதா, துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள், கோட்ட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



