மார்த்தாண்டம், ஜூன் 15 –
மார்த்தாண்டம் அருகே காடுவெட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மனைவி வசந்தபாய் (45). கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணம் முதலீடு செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த கம்பெனியின் உரிமையாளரான ஆன்றோ காட்வின் வர்கீஸ், அங்கு வேலை செய்யும் ஜீன் ஜெபமலர் மற்றும் மினிமெரி சசிதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வசந்தபாயிடம் நீ கொடுக்கும் ரூபாய்க்கு இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என கூறி உள்ளனர்.
இதை நம்பிய வசந்தபாய் அவரிடம் இருந்த ரூ. 10 லட்சத்தை அந்த தனியார் கம்பெனி உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். பின்னர் பங்கு தொகையாக முதல் ஏழு மாதங்களுக்கு ரூ 50 ஆயிரம் என 3 லட்சத்து 50 ஆயிரத்தை வசந்தபாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இதுவரையிலும் பங்குத்தொகை எதுவும் வங்கி கணக்குக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன வசந்த பாய் தனியார் கம்பெனிக்கு சென்று தனது பணத்தை திருப்பி தர கேட்டுள்ளார். அப்போது உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து வசந்த பாயிடம் உன்னையும் உன் குழந்தைகளையும் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வசந்த பாய் இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனியார் கம்பெனியில் உரிமையாளர் ஆன்றோ காட்வின் வர்கீஸ், ஜீன் ஜெபமலர் மற்றும் மினிமேரி சசிதா ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


