மார்த்தாண்டம், பிப். 3 –
பள்ளியாடி அருகே புலிக்குட்டி விளை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (24). ஆட்டோ டிரைவர். இன்று இவரது நண்பர்களான அஜின் (33), முள்ளங்கினாவிளை பகுதி அஜின் (32), ஜாபர் ஜியோ (23) ஆகிய மூன்று பேரை ஏற்றிக்கொண்டு நேசர்புரம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிறியபண்டாரவளை பகுதியில் செல்லும் போது சாலையில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்திய பைக்கில் அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20), செர்வின் ( 22) மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 3 பேர் என 5 பேர் சேர்ந்து ஒலி எழுப்பி உள்ளனர். இதை ஆட்டோவில் வந்த 4 பேரும் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் இருந்த 5 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆட்டோவில் வந்த 4 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் மார்த்தாண்டம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 4 பேரை தாக்கிய சர்ஜின், செர்வின் அவர்கள் நண்பர்கள் மேலும் 3 பேர் என ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


