போகலூர், செப். 9 –
ஆசிரியர், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ, பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆளும் அரசுகள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வருவதில்லை. தற்போதைய அரசு, எங்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பென்சன் திட்டத்தை அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்கும் என ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். அரசின் அறிவிப்பை பொறுத்து எங்களின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.
இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சிவபாலன், அப்துல் நல் முதீன், ராஜேந்திரன், ரமேஷ் கண்ணன், பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் செந்தில்குமார், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முனியசாமி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிசாமி, தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வீரக்குமார், கால்நடைத்துறை மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பு சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் பெரும் திரளாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.
அந்த முறையீட்டு மனுவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொகுப்பூயம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதம் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.



