நாகர்கோவில், ஜூன் 11 –
கன்னியாகுமரி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலா தலம் ஆகும். கன்னியாகுமரியில் கடலில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்ட பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குறிப்பாக கோவா, மங்களூர், கேரளாவிலிருந்து வருகை தருகிறார்கள். கர்நாடக அரசு ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி கர்நாடகாவில் கடற்கரை பகுதிகளில் இருந்து கன்னியாகுமரியிலிருந்து சுற்றுலா திட்டத்தை நிதி உதவியுடன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் திருவனந்தபுரம் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு தற்போது மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு ரயிலை திருவனந்தபுரம் – மங்களூர் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது கேரள பயணிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது,
1989-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் விவாதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ், கன்னியாகுமரியில் இருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், 35 ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேறவில்லை. எனவே
திருவனந்தபுரம் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். இது கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் நீண்ட கால கோரிக்கையான மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதியை வழங்குவது, பயணிகள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயணத்தை எளிதாக்கும். திருவனந்தபுரம் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிப்பது இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வாக அமையும். என குமரி மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


