புதுக்கடை, டிச. 22 –
குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷிபு (37). இவர் குளச்சல் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் இவர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் தேங்காப்பட்டணம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். உடனடியாக போக்குவரத்து போலீஸ் ஷிபு, ஆய்வாளருடன் சேர்ந்து வாகனத்தை நிறுத்தும்படி சைகை செய்தனர்.
உடனடியாக பைக்கில் வந்த வாலிபர் நிறுத்துவது போல் பாசாங்கு செய்து, வேண்டுமென்று திடீரென பைக் வேகத்தை அதிகரித்து போக்குவரத்து காவலர் ஷிபு மீது மோதினார். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்ததில் பைக்கில் அதிவேகமாக வந்த மோதியது முள்ளூர்துறை பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் மகன் ஷானு (21) என தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


