ஈரோடு, மார்ச் 27 –
பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இது போன்ற பிரச்சினைகளுக்காக வரும் பெண்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் உயர் தர சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை சிகிச்சைக்காக நவீன ஹிஸ்ட்ரோஸ்கோப்பி என்ற நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரோட்டரி அமைப்பு ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 678 மதிப்புமிக்க இந்த நவீன கருவியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி உள்ளது.
இந்த கருவி மூலம் முதல் சிகிச்சையை ஈரோடு மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் ஜெயந்தி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேஷ் உறைவிட மருத்துவ அதிகாரி சசிரேகா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன்மூலம் ஒரே நாளில் 8 பெண்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நவீன கருவி மூலம் கர்ப்பபை திசுக்களில் கேமரா மூலம் துல்லியமான பரிசோனை செய்ய முடியும். குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு உட்சுவர் கருக்குழாய் அடைப்பு, நீர்க்கட்டி உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, ரத்த இழப்பு இல்லாத அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
இந்த நவீன கருவி மூலம் சிகிச்சை அளிப்பதால் ஆஸ்பத்திரியில் தங்கும் நாட்கள் குறைவதுடன், அறுவை சிகிச்சை தழும்புகளும் இருக்காது. இந்த சிகிச்சையை ஈரோடு மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி நலப்பணிகளின் இணை இயக்குநர் ஜெயந்தி கேட்டு கொண்டு உள்ளார்.


