ஈரோடு, ஜூலை 9 –
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25 ந் தேதி கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமையேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனைத்து கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன் னோடி வங்கியின் வாயிலாக வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இம்முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயமானதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


