நாகர்கோவில், டிசம்பர் 10 –
ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்; ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பார்சலை எடுத்துப் பார்த்ததில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து இரயில்வே போலீசார் அதனை கைப்பற்றி பறிமுதல் செய்து கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனபோதும் கஞ்சா சர்வ சாதரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கேரள மாநிலத்திற்கும் ரயில்கள் மூலம் கஞ்சா பார்சல்கள் கடத்தி வரப்பட்டு, குமரி மாவட்ட வழியாக இங்கு உள்ள கும்பல்கள் அதனை கைப்பற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கன்னியாகுமரிக்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 18 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. வாரம் ஒரு முறை மற்றும் தினசரி என ஹவுரா – கன்னியாகுமரிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு ஹவுராவில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று கன்னியாகுமரி வந்து சேர்ந்தது. அப்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது.
இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது பண்டல் பண்டலாக பார்சல்கள் இருந்ததை பிரித்துப் பார்த்தனர் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த எடை 18 கிலோ என்பதும் ரயில்கள் மூலமாக கடத்திவரப்பட்டதும் தெரியவந்தது. இதை யார் கடத்தி வந்தார்கள் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



