நாகர்கோவில், ஜூன் 10 –
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (55). இவர் கேரள மாநிலம் கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு புனலூரில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். குழித்துறை சந்திப்பில் ரயில் நின்ற போது தான் கொண்டு வந்த பையை மறந்து வைத்துவிட்டு ஜெயசீலன் கீழே இறங்கி சென்றுள்ளார். அந்தப் பையில் ரூ 7.48 லட்சம் பணம் இருந்தது.
சிறிது நேரத்திற்கு பின்னர் ரயிலில் பையை மறந்து வைத்துவிட்டு இறங்கியது அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். போலீசார் ரயிலில் சோதனை நடத்துவதற்குள் வள்ளியூர் இருந்து கிளம்பியது. இதை அடுத்து நாங்குநேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் ரயிலில் வந்ததும் ஜெயசீலன் பயணம் செய்த முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது அவரது பேக் கிடைத்தது. பணமும் அப்படியே இருந்தது.
இதை அடுத்து அந்த பேக் திருநெல்வேலி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஜெயசீலனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக திருநெல்வேலி சென்று பணத்தை பெற்றுக் கொண்டார். தனது பணத்தை மிக விரைவில் மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசாருக்கு ஜெயசீலன் நன்றி தெரிவித்தார்.



