தருமபுரி, ஜூன் 17 –
தருமபுரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1435ம் ( 2025 – 2026) பசலிக்கான ஜமாபந்தி மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகத்திலும் தொடங்கியது.
அதன்படி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜனாபந்தியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நல்லம்பள்ளி உள் வட்டத்துக்குட்பட்ட 10 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்பட மொத்தம் 256 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
ஜமாபந்தியின் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) பாளையம் உள்வட்டத்திற்கும், நாளை (வியாழக்கிழமை) இண்டூர் உள்வட்டத்திற்கும் ஜனாபந்தி நடைபெறுகிறது. ஜமாபந்தியில் பெறப்படும் கோரிக்கை மனுக்களை முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.



