தென்காசி, ஆகஸ்ட் 04 –
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவில்: தென்காசி மாவட்டத்தில் கோவில் கொடை விழாக்கள் கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் பாட்டுக் கச்சேரிகள் நடத்தவும் சாமக் கொடை நடத்தவும் இரவு முழுவதும் அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் கோவில் கொடை விழா, கோவில் திருவிழா காலங்களில் இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. சில இடங்களில் பாட்டுக் கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்தால் தான் நடத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை காவல்துறை விதிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றாலும் கூட இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிப்பது இல்லை.
தென் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள், கோவில் கொடை விழாக்கள் என்பது இரவு முழுவதும் நடைபெறும் விழாக்கள் ஆகும். தென் மாவட்ட மக்களின் பாரம்பரிய கொடை விழா என்பது குலதெய்வ வழிபாடு, காவல் தெய்வங்கள் வழிபாடுகள் இரவு முழுவதும் நடைபெறுவது வழக்கமாகும். சாமக் கொடை என்ற பெயரில் பாரம்பரிய கொடை விழாக்கள் தென்காசி மாவட்டத்தில் காலங்காலமாக நடந்து வருகிறது. தென் மாவட்ட மக்கள் கோவில் கொடை விழாக்களில் கோவில் திருவிழாக்களில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கலைநிகழ்ச்சிகள் பாட்டு கச்சேரிகள் நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சியானது இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு இரண்டு மணி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து சாமக் கொடை வழிபாடு என்பது நடைபெறும். இந்த கலாச்சாரம் காலங்காலமாக நடந்து வருகின்றது.
கடந்த சில வருடங்களாக தென்காசி மாவட்டத்தில் கோவில் கொடை விழாக்களில் குல தெய்வங்களுக்கு சாமக் கொடை கொடுப்பது அரிதாகிவிட்டது. காரணம் விழாக்கள் நடத்த சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதாலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த கடுமையான விதிமுறைகள் காவல் துறையால் சொல்லப்பட்டதாலும் பல நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாலும் விழா காலங்களில் பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல்துறை கட்டணங்கள் கட்டச் சொல்வதாலும் சில இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உயர் நீதிமன்ற உத்தரவு வேண்டும் என்று காவல்துறை சொல்வதாலும் தென் மாவட்ட மக்களின் பாரம்பரிய குலதெய்வ வழிபாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கிராமிய கலைஞர்கள் தங்களுக்கு தொழில்கள் இல்லாத காரணத்தினால் மாற்று தொழிலை நோக்கி வெளி மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்கின்ற ஒரு மோசமான சூழ்நிலை கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. இதனால் பாரம்பரிய கிராமிய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. தென் மாவட்ட மக்கள் தமிழ்நாட்டில் உள்நாட்டில் கொடை விழா காலங்களில் அகதிகளை போல அடங்கி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கொடை விழாக்களில் திருவிழா காலங்களில் பிற மாவட்டங்களுக்கு ஒரு சட்டமும் தென்காசி மாவட்ட மக்களுக்கு ஒரு சட்டமாக இருப்பது வேதனைக்குரியதாகும்.
அதனால் எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று பரிந்துரை செய்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இரவு 10 மணிக்கு மேல் இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் பாட்டு கச்சேரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்கள்.



