நாகர்கோவில், ஏப். 13 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு அந்தந்தத் தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 85 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். இதில் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வழக்கமாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும் (ஒரு பொத்தான் நோட்டாவிற்காக ஒதுக்கி வைக்கப்படும்). நாகர்கோவில் தொகுதியில் 20 வேட்பாளர்கள் இருப்பதால், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடிக்கும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சட்ட தொகுதிக்குத் தேவையான 386 கூடுதல் மின்னணு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் தமிழரசி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலர்கள் சுகிதா (பொது), ரோஷன் பேகம், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



