தருமபுரி, ஜூன் 06 –
தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி குண்டலபட்டியில் உள்ள பச்சைமுத்து கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பச்சமுத்து கல்வி குழும தலைவர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி, பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
இதே தொடர்ந்து சௌமியா அன்புமணி பள்ளி மாணவ, மாணவிகளிடம் உரையாற்றியபோது: ஆண்டுதோறும் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்கள் உயர்கல்வியில் சேரும் பொழுது டாக்டர், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று பெரும்பாலரும் விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவ படிப்பு முடித்து மருத்துவர்கள் ஆக வெளி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 1,500 மருத்துவ படிப்புகள் மட்டுமே உள்ளது. இதில் 7.5 இட ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிலே தருமபுரியில் மட்டும் அதிகமானவர்கள் சேர்கின்றனர்.
பொறியியல் கல்லூரியில் வருடத்திற்கு ஒரு லட்சத்து 72,000 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்று வெளி வருகின்றனர். மேலும் அதிக அளவில் மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பாரதியார் பல்கலைக்கழகம் தொழில் வழிகாட்டுதல் துறை தலைவர் முனைவர் விமலா, டாட்டா எலக்ட்ரானிக்ஸ் திட்ட மனித வள மேம்பாட்டு துறை அலுவலர் வெள்ளங்கிரி, பயிற்சி திட்ட உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வன் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



