ஈரோடு, ஜூன் 22 –
வாரத்திற்கு ஒரு நாளாவது யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்று உலக சமுதாய சேவா சங்க தலைவர் டாக்டர் எஸ்.கே.எம். மயிலானந்தன் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தின விழாவில் அவர் பேசியதாவது: “இன்றைய சமூகம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அமைதியை நிலைநாட்ட யோகாவும், தியானமும் மட்டுமே சிறந்த வழிகள். யோகா எந்த ஒரு மதத்திற்கும் உரியது அல்ல. கிறிஸ்தவர்களும் இதைப் பயிற்சி செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் பள்ளிகளில் யோகா மற்றும் தியான வகுப்புகள் இருந்தன. ஆனால், சமீபகாலமாக இதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் வாரம் ஒரு பாட வேளையாவது மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கல்லூரி செயலாளர் சந்திரசேகர், ஈரோடு கலைக் கல்லூரி தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ஜெகதீசன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகள் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.



