தஞ்சாவூர், மே 18 –
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள அகழியில் புதர்களை அகற்றி தூர் வாரும்படி நடைபெறுவதை முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் அருகே உள்ள அகழியை சீரமைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கருவேலை மரங்கள், புதர்களை அகற்றி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொக்லின் ஏந்திரங்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை முரசொலி எம்பி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் அகழி பகுதிக்குச் சென்று நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பணிகளின் முன்னேற்றம், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளும் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் முரசொலி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக்காக இந்திய சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பெரிய கோவில் கிரிவல பாதைக்கு புதிய டைல்ஸ் அமைத்தல், ராஜ ராஜன் பூங்காவை சீரமைத்து மேம்படுத்துதல், பூங்கா எதிரே உள்ள பார்க்கில் பகுதியை சீரமைத்தல் மற்றும் மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் பெரிய கோவில் வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், ஆர் ஓ பிளான்ட் அமைத்தல், கழிவறைகள் சீரமைத்தல், போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் ஏடிஎம் எந்திரங்கள் நிறுவுதல், காலணிகள் பாதுகாப்பு அறையை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.



