நாகர்கோவில், ஜூலை 16 –
அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடையும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பழத்தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவினை மேம்படுத்திட தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து வட்டகோட்டை சுற்றுலா தலத்தினை பார்வையிடப்பட்டதோடு வட்டக்கோட்டையின் அருகில் உள்ள ஒத்தப்பனை குளம் பார்வையிடப்பட்டது. அங்கு படர்ந்துள்ள பாசி உள்ளிட்ட கழிவுகளை அகற்றி குளத்திலிருந்து செல்லும் உபரி நீரினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை மற்றும் அனைத்து பாட புத்தகங்களும் கிடைக்கப்பெற்றதா என மாணவ மாணவியர்களிடம் கேட்டறியப்பட்டது. நல்லூர் கால்நடை மருந்தக வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.10 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுசீந்திரம் வழியாக செல்லும் பழையாற்றினை ஆய்வுமேற்கொண்டு, தூர்வார துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், தோட்டகலைத்துறை உதவி அலுவலர், அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகபாய், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



