தஞ்சாவூர், செப்.04.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ரேவதி முன்னிலையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணனுன்னி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடிய 195 கிராமங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டம், கோட்டம் மற்றும் வட்ட அளவில் 67 குழுக்களும், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட 10 பன்முகத் துறை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மழை பாதிப்பின்போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உட்பட 277 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்கும் வகையில் 152 இடங்களில் 1,16,535 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 19,750 சவுக்கு கம்புகள், 162 பொக்லைன் இயந்திரங்கள், 109 மின்சார உற்பத்தி இயந்திரங்கள், 193 மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் 53 படகுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணனுன்னி தெரிவித்தார்.



