தஞ்சாவூா், ஏப்ரல் 15 –
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு க்கான சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. சித்திரை பெருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெரிய கோவில் தேர் நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரில் பந்தகால் நடப்பட்டது. இதில் அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) கார்த்திகேயன் மற்றும் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், தேர் அலங்கார பணிகளை பணியாளர்கள் துவக்கினர். தேரின் சாதாரண உயரம் 19 அடி, அகலம் 18 அடியாகும். ஆனால், தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக காணப்படும். இதை போல், தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையாக இருக்கும் என கோயில் பணியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.



