கோவை, மார்ச் 31 –
திருநர் சமூகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தத்திற்கு எதிராக, மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சமூக செயற்பாட்டாளர் கல்கி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரியா பாபு, அப்சரம்மா, ஜோதியம்மா, உஷா, யாஸ்மின், மீரா உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, “திருநர் உரிமை பாதுகாப்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெறு!” எனக் கோஷமிட்டனர். பதாகைகள், குரல் முழக்கங்கள், வண்ண ஓவியங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “திருநங்கைகளின் அடையாளத்தை பறிக்கும் இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தது துரதிஷ்டவசமானது, இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்!” என்றும் திருநர் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டம், திருநர் சமூகத்தின் உரிமை பாதுகாப்புக்கான உறுதியான குரலாகவும், அரசின் சட்ட திருத்தத்திற்கு எதிரான வலுவான எதிர்ப்பாகவும் அமைந்தது. SFI அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.



