மார்த்தாண்டம், ஜன. 21 –
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று பாட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி பணியாற்றினர். அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாள் மட்டும் வேலை வழங்க வேண்டும். அதாவது சனிக்கிழமை நிரந்தர விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக 2023ம் ஆண்டு இந்தியன் வங்கி அசோசியேசன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்தக் கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஒரு நாள் அகில இந்திய போராட்டம் நடத்துகின்றனர்.
இதன் தொடக்கமாக நேற்று யூனியன் பாங்க் ஆப் இந்தியா மார்த்தாண்டம் கிளை, கனரா வங்கி குழித்துறை கிளை உட்பட வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து பணியாற்றினர். இதில் வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். வங்கி ஊழியர்களுக்கு அகில இந்திய அளவில் 9 யூனியன் உள்ளது. இந்த யூனியன் கீழ் உள்ள ஊழியர்கள் பாட்ஜ் அணிந்திருந்தனர்.



