மார்த்தாண்டம், பிப். 5 –
மார்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் பிரிஜோ (26). இவரை கஞ்சா போதை கும்பலை சேர்ந்த அஸ்வின் (27) மற்றும் சிலர் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தினர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஸ்வின் என்பவரை கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து இதே கும்பல் பள்ளியாடி அருகே சிறிய பண்டாரவளை பகுதி வழியாக வந்த ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் (24), அஜின் (33), மற்றொரு அஜின் (32) மற்றும் 32 ஜாபர் ஜியோ (23) ஆகிய 4 பேரை கத்தியால் குத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்த கத்தி சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கார்த்திகேயன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். டிஎஸ்பி நல்லசிவம் உத்தரவின் பேரில் போலீசார் பள்ளியாடியை சார்ந்த செர்ஜின்(20), செர்வின் (22) உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கத்தி குத்து சம்பவங்கள் குறித்து அறிந்த எஸ் பி ஸ்டாலின் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளியாடி பகுதியில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பதுங்கி இருப்பதாக மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து போலீசார் பள்ளியாடியில் பதுங்கி இருந்த அண்ணன் தம்பிகளான செர்வின் (22), செர்ஜின் (20) ஆகிய இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர். மேல அவர்களிடம் இருந்து 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரையும் இரணியல் கோட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



