நாகர்கோவில், செப்டம்பர் 15 –
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெற்றோரை இழந்து உறவினர் ஆதரவில் வாழும் குழந்தைகளுக்கு ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் உதவித்தொகை வழங்கும் விழா நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கலெக்டர் அழகுமீனா தலைமை வைத்து பேசியதாவது: குமரியில் 106 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, ஐடி கார்டு வழங்கப்படுகிறது. வங்கி கணக்கில் உதவித்தொகை வழங்கப்படும். இவர்கள் கல்லூரி சென்ற பிறகு படிப்பு உதவிகள் அனைத்தும் முதலமைச்சரால் வழங்கப்படும். கேன்சர், விபத்து, தற்கொலை உட்பட சமூக காரணங்களினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள், காசோலைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று அண்ணா கூறியது போல் அவரது பிறந்தநாளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்கு உதவும் பாக்கியம் பெரிய இன்பம். இந்த அரசு அந்த உதவிகளை செய்கிறது. அரசு நம்பிக்கையை தருகிறது. நீங்கள் உங்களை நம்ப வேண்டும். உங்களின் கவனத்தை சிதற விடக்கூடாது. உங்களின் எதிர்காலம் தொடர்பான தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ வேண்டும். அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இங்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளது. அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் வளர்ந்து வரும் போது அடுத்த திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வருவார். குழந்தைகளுக்கு எந்த நெருக்கடியிலும் உதவிட தயாராக உள்ளோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்எல்ஏ, துணை மேயர் மேரி பிரின்சி லதா, முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


