நாகர்கோவில், மார்ச் 9 –
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பது வழக்கம். பொதுவாக ஜனவரி மாதம் முதல் கடல் ஆமைகள் மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு செல்லும். அவற்றை வனத்துறையினர் கண்காணித்து பாதுகாப்பாக சேகரித்து பொரிப்பகத்தில் வைப்பார்கள். மேலும் பொரிந்ததும் அவை கடலில் விடப்படுவது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமரிமாவட்டத்தில் 46 மீனவ கிராமப்புற கடற்கரை பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ஆலிவ்ரிட்லி கடல் ஆமைகள் (பங்குனி ஆமை) கரைக்கு வந்து மணலில் குழி தோண்டி முட்டையிட்டு சென்றது. அந்த முட்டைகளை லெமூர் கடற்கரை பகுதி, ராஜாக்கமங்கலம், முட்டம்,குளச்சல் உள்பட கடற்கரைகளில் ஆமைகள் 6,504 முட்டைகளை இட்டது.
இந்த முட்டைகளை நாய், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, கடற்கரை பகுதிகளில் முட்டை பாதுகாப்பு கூடங்கள் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் நான்கு இடங்களில் ஆமை முட்டைகள் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் லெமூர் கடற்கரை மற்றும் துவாரகாபதி ஆகிய பகுதிகளில் 3 கடல் ஆமை முட்டை பொரிப்பகம் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 2 மாதங்களில் 6,504 கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டது. இதில் 1,448 குஞ்சு கள் முட்டைகளில் இருந்து வெளிவந்தது. அந்த ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டுள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகளில் வன ஊழியர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



