தென்காசி, ஏப்ரல் 18 –
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அஇஅதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா செங்கோட்டை நகரப்பகுதியில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக செங்கோட்டை காவல் நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கிய அவருக்கு நகர்மன்ற உறுப்பினர் சுடர் ஒளி ராமதாஸ் ஏற்பாட்டில் கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. கே.சி ரோடு வம்பளந்தான் முக்கு, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் காந்தி சிலை அருகில் கூடியிருந்த பொதுமக்களிடம் பேசும் போது: எடப்பாடியார் முதலமைச்சராக வந்த உடன் அனைத்து குடும்பங்களுக்கும் பத்தாயிரம், மகளிருக்கு மாதம் ரூ.2000 குல விளக்கு திட்ட உதவித்தொகை, கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, ஆண் பெண் இருபாலரும் கட்டணமில்லா பேருந்து பயணம், தாலிக்கு தங்கம், மடிக்கணினி என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள். எனவே உங்களது பொன்னான புனிதமான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாரி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் பேராதரவுடன் கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த நிலையில் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 கோடிக்கும் அதிகமான பணிகளை செயல்படுத்த கொடுத்த நிதியினை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி வைத்தது இந்த விடியா ஆட்சியின் அரசியல்வாதிகள் அதிகாரிகள். ஆனால் இதையும் மீறி பேருந்து நிழற்குடைகள், நியாய விலை கடைகள், உணவருந்தும் கூடம், பள்ளி கூடுதல் வகுப்பறை, நூலகம், சுற்றுச்சுவர் அமைத்தல் என இந்த ஐந்து ஆண்டுகளில் ரு.15 கோடியே 80 லட்சத்திற்கான பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செய்துள்ளேன். இந்த மக்களோடு மக்களாக பல போராட்டங்களில் நான் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற காரணத்தால் தான் மண்ணின் மைந்தன் என்று கூறுகிறேன்.
இதுமட்டுமல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் கனிமவள கொள்ளையை தட்டி கேட்டதில் என்னை விட இந்த மாவட்டத்தில் எந்த அரசியல்வாதியும் கிடையாது. இங்கு வைத்திருக்கும் 3 ப்ளெக்ஸ் போர்டில் வைத்திருப்பது கனிமவள கொள்ளை குறித்து நான் பேசியதில் வந்த பத்திரிகை செய்தி தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த கனிமவள கொள்ளைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக வந்த உடன் முடிவு காணப்படும். அதை நான் விடுவதாகவும் இல்லை. மேலும் ஒரு தகவல் என்னவென்றால் கனிமவள வாகன அசோசியேஷன் சார்பில் என்னை தோற்கடிக்க 3 கோடி வழங்கியுள்ளனர். உயிரை கொடுத்து வேலை செய்ய ஓராயிரம் தொண்டர்கள் இருக்கும் போது இந்த 3 கோடி இல்லை 30 கோடி கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது. இந்த திமுகவினர் 8000 ரூபாய்க்கு கூப்பன் அடித்து கொடுக்கிறார்களாம். அது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்பதை தாய்மார்கள் உணர்ந்து கொள்ளுங்கள் என்று பேசினார்.



