கன்னியாகுமரி, அக். 6 –
குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம நிகழ்வு முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியில் தனியார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு குமரிமாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ். அனில்குமார் அனைவரையும் வரவேற்றார். மேளதாளத்துடனும் இளம் சிறார்கள் சிலம்பாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் தோழர் த. அறம் குடும்ப தோழமை சங்கம நிகழ்வை தொடங்கி வைத்தார். இலக்கிய விமர்சகர், மார்க்சிய முன்னோடி, திறனாய்வாளர் தி. சு. நடராஜன் குறித்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் தோழர் எஸ். கே. கங்கா கருத்துரை ஆற்றினார். கன்னியாகுமரி மாவட்ட மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் சடையப்பன் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்ட தோழியர்களுக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலசெயலாளர் தோழியர் மு. கண்ணகி பயனாடை அணிவித்து இந்திய சுதந்திர போராட்டத்தில் மகளீரின் பங்கு குறித்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மகளீரின் பங்களிப்பை அங்கீகரிப்பது குறித்து விரிவாக பேசினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தோழர் தினேஷ் சமூக மாற்றத்திலும் சோசலிச சமூக அமைப்பிலும் மாணவர்களின் பங்களிப்பை சிறப்பாக விளக்கி பேசினார்.
சங்கமம் நிகழ்வில் ஆரல் பாலன் இசைக்குழுவின் தோழர்கள் ஒய். புஷ்பராஜ், மக்கள் பாடகர் நெல்சன், தங்கவேல் முருகன், சி. வாசு பூதை மகேஷ் ஆகியோரின் மக்கள் இசை பாடல்களும் தோழர் ப. திருவுடையான் நினைவு தண்டபாணி இசைக்குழுவின் மண்ணின் பாடல்கள் நிகழ்சியும் சிறப்பாக அமைந்தன. இசை மற்றும் செண்டை மேள கலைஞர்களுக்கு மாவட்ட பொருளாளர் தோழர் பி. தாமரைசிங் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கே. சஜேஷ், மற்றும் தோழியர் ஆர். செல்வராணி ஆகியோர் தினேஷ், மற்றும் மு. கண்ணகி ஆகியோருக்கு சிறப்பு செய்தனர். நிகழ்வை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் தா. மகேஷ் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.



