நாகர்கோவில், ஜூன் 29 –
குமரி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வு பணிகள் புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தினேஷ் ஆலிவார் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் துறை அலுவலர்களுடன் கேட்டறிந்ததோடு, சீரமைக்கப்படவேண்டிய நீர் தேக்க தொட்டிகள், குழாய்கள் உள்ளிட்டவை உடனடியாக சீர் செய்து தண்ணீர் வழங்கிட செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விளவங்கோடு சட்டமன்றத்திற்குட்பட்ட காப்பிக்காடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டியினையும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லுக்குறியை அடுத்துள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, இந்த நீர் தேக்க தொட்டியின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முழு சுகாதாரத்துடன் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டதோடு கன்னியாகுமரி மாவட்டதிற்குட்ட நீர் தேக்க தொட்டிகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை தெளித்திட பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வுகளில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் ராஜன், ஹரிகோவித், பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



