நாகர்கோவில், செப்டம்பர் 20 –
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாடு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் என்ற துணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் உயர்நிலை மக்கள் அமைப்பு ஆகும். மேற்கண்ட சேவைகளை வழங்கிட தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற் தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. செல்போன் செயலிகளை பயன்படுத்தத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய வளப் பயிற்றுனராக விண்ணப்பிக்கும் போது அவர் சார்ந்த சுய உதவி குழுவில் வராக்கடன் நிலுவை இல்லாது இருக்க வேண்டும். சமுதாயம் வள பயிற்றுனராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அல்லது) பகுதி நேரமாகவோ பணிபுரிபவராகவோ இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவில் இருந்து சமுதாய வளர் பயிற்றுனராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அத் தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். சமுதாய வளர் பயிற்றுனர் மாதிரி விண்ணப்ப படிவம் தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பெற்றுக் கொள்ளலாம். சமுதாய வள பயி ற்றுனர்களாக தேர்வு செய்யப்பட்டோருக்கு தர மதிப்பீட்டின் அடிப்படையில் நாள் ஒன்றிற்கு மதிப்பூதியமாக ரூ. 750, ரூ.500 மற்றும் ரூ.350 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரியில் 26-09-25 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



