தென்தாமரைகுளம், ஜூலை 18 –
பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்திய தி.மு.க எம்பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்தமனுவில் தெரிவித்திருப்பதாவது: உலகத்தலைவர்களில் பெருந்தலைவர் காமராஜர் போன்று சிறந்த தலைவர் பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை. தன்னுடைய வாழ்நாளில் அனைவருக்கும் ஆறாத சோறு, கிழியாத ஆடை, ஒழுகாத வீடு கிடைக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தலைவர். தன்னுடைய வாழ்நாளில் ரேஷன் அரிசியே உண்டு வாழ்ந்தார். அனைவருக்கும் கல்வி கிடைத்திட அயராது பாடுபட்ட தலைவர். பெருந்தலைவர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள், தொழிற்சாலைகளால் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து காணப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா அமெரிக்கா சென்றபோது ஜனாதிபதி நிக்சனை பார்க்க விரும்பினார். நிக்சன் மறுத்துவிட்டார். நிக்சன் இந்தியா வந்தபோது பெருந்தலைவர் காமராஜரை பார்க்க விரும்பினார். அண்ணாவை நிக்சன் பார்க்க மறுத்த காரணத்தினால் நிக்சனை பெருந்தலைவர் காமராஜர் பார்க்க மறுத்துவிட்டார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி என்று சொன்னார். காமராஜர் ரஷ்யா சென்றபோது கூட கதர் சட்டை, கதர் வேஷ்டியுடன் தான் சென்றார். இந்திய திருநாட்டின் இராணுவ முப்படை தளபதி திம்மையாவுக்கும் ராணுவ அமைச்சர் கிருஷ்ணமேனன்-க்கும் மோதல் ஏற்பட்டதால் பிரதமர் நேருவுக்கு மிகுந்த தலைவலியாக இருந்தது. ஆனால் காமராஜர் நேருவிடம் திம்மையாவை மேல் நாடுகளில் உள்ள இராணுவ அமைப்புகளை பார்வையிடுவதற்காக திம்மையாவை அனுப்பிவிட்டு முப்படைக்கும் தனித்தனியாக அமைச்சகம் ஏற்படுத்தினால் திம்மையா அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவர் முப்படை தளபதியில் இருந்து விலகி விடுவார். ஆதலால் அந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என நேருவுக்கு ஆலோசனை கூறினார்.
இந்தியா-சீனா போரின்போது அமெரிக்கா தளவாடம் இந்தியாவிற்கு வரவேண்டும் என்றால் அதற்கு காரண்டி தரவேண்டும் என அமெரிக்கா அரசாங்கம் சொன்னது. நேரு அதனால் கவலையில் இருந்தபோது காமராஜர் அமெரிக்காகாரன் கடை ஏதாவது இங்கு இருக்கிறதா எனக்கேட்டார். நேரு அமெரிக்காவின் பேங்க் இங்குள்ளது என்றார். அதை மூடச்சொன்னார் காமராஜர். நமக்கு பிரயோஜனம் இல்லாத இந்த பேங்க் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று சொன்னபோது நேரு அமெரிக்காவிடம் பேங்கை மூடச்சொன்னார். அதனால் அமெரிக்கா இராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு அனுப்பியது. சென்னை மாநகரை ஆந்திராவோடு இணைக்க முயற்சித்தபோது நேருவிடம் காமராஜர் சண்டையிட்டு சென்னை மாநகரத்தை தமிழ்நாட்டோடு இருக்க வைத்தார்.
பெற்ற தாய் சிவகாமி அம்மையாரை காமராஜர் முதல்வராக இருந்த 9 ஆண்டுகளில் மூன்று முறையே 2,3 நாட்கள் தன்னோடு தங்கவைத்தார். காமராஜர் தன்னுடைய ரெங்கு பெட்டியில் தாயாரின் படத்தையும், இராமாயணம், பாரதிதாசன் கவிதைகள் போன்றவற்றை வைத்திருந்தார். காலையில் தினமும் வணங்கிவிட்டே தன்னுடைய அலுவல்களை தொடங்குவார்.
டெல்லியில் ஒரு பொருட்காட்சியை திறந்துவைக்க நேருவுடன் காமராஜரும் சென்றார். பொருட்காட்சியில் முதன்முதலாக எடை பார்க்கும் எந்திரம் நிறுவப்பட்டிருந்தது. நேரு முதன்முதலாக 5.1 போட்டு எடை பார்த்தார். பின்னர் காமராஜரை எடைபார்க்க நேருவும் அரசு அதிகாரிகளும் சொல்லும்போது அவர் ஒதுங்கியே நின்றார். நேரு காமராஜரிடம் 1 ரூபாய் கூட இருக்காது, அதனால்தான் அவர் ஒதுங்கி நிற்கின்றார் எனக்கூறி தானே ஒரு ரூபாய் போட்டு காமராஜரை எடை பார்க்க வைத்தார். தாயார் இறந்தபோது வெட்டியான் காமராஜரிடம் சாவுக்கூலி கேட்டபோது காமராஜரிடம் ரூபாய் இல்லாத காரணத்தினால் அவருடைய நண்பர் ரூபாய் கொடுக்க முயன்றபோது வெட்டியான் எனக்கு ரூபாய் தேவையில்லை. காமராஜர் அய்யாவிடம் ஒரு ரூபாயாவது பெற்று அதனை பாதுகாக்க எண்ணித்தான் கேட்டேன். ஆண்டவன் அதற்கு அருளை கொடுக்கவில்லை. காமராஜர் தன்னுடைய அமைச்சரவையில் பரமேஷ்வரன் என்ற தாழ்த்தப்பட்ட ஒருவரை அறநிலையத்துறை அமைச்சராக்கி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அர்ச்சகரால் பரிவட்டம் கட்ட வைத்தார். எந்த முதல்வரும் காவல்துறையை தன்னிடமே வைத்திருப்பார்கள். ஆனால் காமராஜர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கக்கன் என்பவருக்கு காவல்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
காமராஜரை பாராட்டும்போது கக்கன் பிள்ளைக்குட்டிக்காரன், அவனது கை சுத்தமானது. அவனை பாராட்டுங்கள் என்று சொன்னார். பெருந்தலைவர் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் முதல் மந்திரி பதவியை துறந்தார். சுதந்திர போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். 9 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தார். 12 முறை தமிழ்நாடு காங்கிரஸ் தவைராக இருந்தார். 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 5 வருடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். பெற்ற தாய் இறந்தபோது கூட கண்ணீர் விடாத காமராஜர், கருணாநிதி கள்ளுக்கடையை திறந்தபோதும் இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டுவந்தபோதும் கண்ணீர் வடித்தார்.
அக்டோபர் 1-ம் தேதி நடிகர் திலகத்திற்கு பிறந்தநாள். ஆகையால் நடிகர் திலகம் காமராஜரை நேரில் பார்த்து ஆசி வாங்க நினைத்த சமயத்தில் காமராஜரே சிவாஜி வீட்டிற்கு நேரில் வந்து வாழ்த்தினார். காமராஜர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கட்சி நிதியை பேங்கில் அவசர அவசரமாக செலுத்த ஆணையிட்டார். சாகும்போது கடனாளியாக இருக்கு விரும்பாத ஒரு தலைவன், உத்தம தலைவர் காமராஜர் அக்டோபர் 2-ம் தேதி தன் உதவியாளர் வைரவனிடம், வைரவா விளக்கை அணை என்று படுக்கச்சென்றார். உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. அப்படிப்பட்ட தலைவரை பற்றி அவதூறு பரப்பும் திராவிட கொத்தடிமை திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்



