நாகர்கோவில், ஜன. 19 –
அரசியல் சார்பற்ற அகில இந்திய ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகளின் யாத்திரை என்ற திட்டம் அடுத்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் அகில இந்தியா விவசாயிகள் சங்கத் தலைவர் ஜல்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் தொடங்குகிறது. அதற்கான தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் பி அய்யாக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் தலைவராக குமரி மாவட்ட செயலாளர் மற்றும் பாசன துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்; விவசாய வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். விவசாயிகள் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். குமரியில் நடைபெறும் நான்கு வழி சாலை பணிகள் மற்றும் ரயில் இருப்பு பாதை பணிகளில் நீர் வழி பாதைகளை பாதுகாக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளை தூர்வார வேண்டும். விவசாயிகள் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கடந்த வருடத்தை போல அனுமதிக்க வேண்டும்.
வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடமாற்றத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கன்னியாகுமரியில் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் விவசாயிகள் யாத்திரைக்கு பெருமளவு விவசாயிகள் திரண்டு ஆதரவளிப்பது என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் எஸ். தாணு பிள்ளை, துணைத் தலைவர் வி. முருகேச பிள்ளை, பொருளாளர் செண்பக சேகர பிள்ளை, துணைச் செயலாளர் ஹென்றி, துணைச் செயலாளர் சி. அருள், துணைச் செயலாளர் டி. தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



