மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீர்த்திவாசன் சுவாமி ஆலயம் எனப்படும் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானை வடிவிலான அசுரனை இறைவன் சம்ஹாரம் செய்து இடுப்பில் ஆடையாக அணிந்ததார் என ஆலய புராண வரலாறு தெரிவிக்கின்றது. தேவாரப் பாடல்கள் மற்றும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் 3 யானைகள் மேல் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதனை முன்னிட்டு பசு குதிரை யானை இவற்றிற்கு முறையே கோபூஜை அஸ்வ பூஜை கஜ பூஜை ஆகியவை செய்யப்பட்டது. தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்தனர். ஆலயத்தை சுற்றி நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



