மயிலாடுதுறை, ஆகஸ்ட் 12 –
மயிலாடு துறையை அடுத்துள்ளது சித்தர்காடு. இங்கு கடந்த 50 ஆண்டுகளாக அரசின் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை சுற்றி சுமார் 5000 பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஆலையிலிருந்து வெளியேறும் தூசியினால் இருமல், காச நோய், கேன்சர் போன்ற நோய்கள் வந்து பலர் இறந்து உள்ளனர் என்றும், பலர் நோய்வாய்பட்டு உள்ளனர் எனக் ஆலையை மூட கோரி சுடுகாட்டில் உண்டு உறங்கும் போராட்டம் என பல போராட்டங்கள் செய்து உள்ளனர். மேலும் ஆலையை மூடக்கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்று உள்ளனர்.
தொடர்ந்து ஆலை இயங்குவதனால் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எச்.எஸ். ஸ்ரீகாந்த், ஊர்பொதுமக்கள், அரிசி ஆலை அதிகாரிகள் மாசு கட்டுபாட்டு அதிகாரிகளை அழைத்து பேசி தற்காலிகமாக ஆலையை மூடும்படி கூறி உள்ளார். ஆனால் ஆலை அதிகாரிகள் ஆட்சியரின் உத்தரவை மீறி தொடர்ந்து ஆலையை இயக்குவதை கண்டித்து சித்தர்காடு கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாளில் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு கொடுத்தனர்.



