நாகர்கோவில், மே 29 –
கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் திற்பரப்பு சுற்றுலா தலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் இதமான காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். கோதையார் உட்பட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பணை பகுதியில் இறங்கவோ, குளிக்கவோ, மது அருந்தவோ கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா பயணிகளுக்கு கடையால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு போன்ற ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதே போன்று மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவானது. திற்பரப்பு, குலசேகரம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் அவ்வப்போது மிதமான அளவிலும், மற்ற நேரங்களில் லேசான அளவிலும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே காணப்பட்டது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக மதியத்துடன் தண்ணீர் வரத்து கூடியது. பாதுகாப்பான நிலையில் இன்று தண்ணீர் வரத்து காணப்பட்டாலும், மழை தொடர்ந்து பெய்து வந்ததால் அருவியின் ஒரு பகுதியில் மட்டும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கவில்லை. மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.



