கன்னியாகுமரி மே 8
குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ஆர். டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயன்படாத நிலையை எட்டி உள்ளது. பம்மம் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பாலத்தின் நடுப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதிலும் பாலத்தின் பிரதான கட்டுமானமான காங்கிரீட் பகுதியிலேயே ஓட்டை விழுந்து கம்பிகள் தெரிவது பாலத்தின் உறுதித் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட போதே சாமானிய மக்களுக்கும் அதன் உறுதித் தன்மையில் சந்தேகம் இருந்தது. பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகள் மிக சாதாரணமாக அசைவை உணர்ந்தனர். இது குறித்து மக்கள் மன்றத்தில் பேச்சு வந்தது. ஆனால் இந்தப் பாலம் நூறு வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும் அதற்கு நான் உத்தரவாதம் என தெரிவித்து இருந்தார் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இப்போது, பாலத்தின் உறுதித் தன்மையை மக்கள் உணர்ந்துவிட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இதற்கும் முன்னரே, பலமுறை பாலத்தில் அங்காங்கே விரிசல் ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவற்றின் உச்சமாக இப்போது பாலத்தின் மையப் பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் அதை ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து வருகிறார். அந்த காலம் முடிவதற்குள்ளேயே சேதம் ஆகி, பாலத்தின் கீழ்பகுதி வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டப்பட்டதன் நோக்கத்தையே இச்சம்பவம் சிதைத்து விட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தின் தரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, மக்களின் உயிருக்கு உலை வைக்கக் காத்திருக்கும் இந்த பாலத்தை சரி செய்யவோ, பேராபத்து இருக்கும் பட்சத்தில் நிரந்தரமாக மூடவோ வேண்டும். மேலும் தரமற்ற முறையில் மார்த்தாண்டம் மேம்பாலத்தை எழுப்பிய ஒப்பந்தாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



