விழுப்புரம், ஜூலை 25 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நடப்பாண்டு மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
அந்த வகையில் மாநில அரசின் திட்டங்களான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் (நெல்), மானாவாரி பகுதி மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணையம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள்), முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், ஒன்றிய அரசின் திட்டங்களான தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரம் ஆய்வு மேற்கொண்டதுடன் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்தும், டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள், வேளாண் பயிர்களுக்கான இழப்பீடுகள் உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனிவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



