ஈரோடு, ஏப். 24 –
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு ,ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி பவானி, பெருந்துறை, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 8 சட்ட சபை தொகுதிகளிலும் நேற்று அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஒரு சில இடங்களில் ஓட்டு பதிவு முடியும் தருவாயில் ஓட்டு போட வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது.
இதன் பிறகு அனைத்து இடங்களிலும் வாக்கு பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து வாக்கு பதிவு இயந்திரங்கள் வேன்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, அந்தியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒவ்வொரு அறையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இந்த அறைகளுக்கு 24 நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதேபோல கோபி, பவானி சாகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 4 ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.


