ஈரோடு, பிப். 26 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் விடுதலை வேங்கைகள் கட்சி மாநில தலைவர் தமிழின்பன் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோட்டில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் விபத்திற்கான அவசர சிகிச்சை பிரிவில் மிக நுட்பமான சிகிச்சைகளை மேற்கொள்ள ஏதுவாக அதிநவீன கருவிகள் போதுமான அளவில் இல்லை. குறிப்பாக தலையில் அடிபட்டால் மூளை நரம்பியல் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக கோவை மற்றும் சேலத்திற்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.
இதயம் சம்பந்தப்பட்ட முக்கிய நோய்களுக்கும் இதே நிலை நீடிக்கிறது. 60 லிருந்து 100 கிலோமீட்டர் தூரம் நோயாளிகளை ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் கொண்டு செல்லும்போது பலர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ளவர்களை அரசு மனையில் சேர்ப்பதற்கு பொதுமக்கள் முன் வருவதில்லை. தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக நகை, வீடு, நிலம் உள்ளிட்டவைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள்.
ஆகவே மேற்சொன்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நல்ல அனுபவம் உள்ள தனி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அது நவீன மருத்துவ உபகரணங்களை நிறுவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


