களியக்காவிளை, ஏப். 27 –
களியக்காவிளை அருகே தமிழக கேரளா எல்லை பகுதியான பாறசாலை, விளத்தங்கரை சர்ச் அருகே வசித்து வருபவர் விஷ்ணு (37). டியூசன் ஆசிரியர். இவரது மனைவி அல்மா (33). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இதுவரையிலும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சமூக வலைத்தளங்களில் அல்மா அதிக நேரத்தை செலவிடுவதால், மனைவி மீது விஷ்ணுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அருகில் உள்ள சகோதரர் வீட்டில் சென்று சம்பவம் குறித்து விஷ்ணு கூறி உள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பாறசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் விஷ்ணுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



