நாகர்கோவில், மே. 5 –
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் போன்ற 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக தனித்தனியாக அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நடைபெற்றது. முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பயன்படுத்தப்பட்ட மற்றும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகளை மீண்டும் பாதுகாப்பாக வைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.
இதற்காக வாக்கு எண்ணிக்கை மையமான கோணம் பொறியியல் கல்லூரியில் இருந்து இயந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்ல தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனி தனியாக 6 லாரிகள் வரவழைக்கப்பட்டன.
பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு, கோணத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கொண்டு சென்று இயந்திர பாதுகாப்பு அறையில் தொகுதி வாரியாக தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை அடுத்து அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



