சுசீந்திரம், பிப். 20 –
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் அருகே வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த தெப்பக்குளம் சுற்றுச்சுவர் திடீர் என வடக்கு பகுதியில் சரிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு மணல் மூடைகளை அடிக்கி தற்காலிக தடுப்பு சுவர் கட்டி இருந்தனர்.
இந்நிலையில் சுசிந்திரம் ஆசிரமத்தினை சேர்ந்த கார்த்தி கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தெப்பத் திருவிழா வருவதால் உடனடியாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தடுப்புச் சுவரை கட்டி முடிக்க வேண்டும் என கோரி இருந்தார். அந்த வழக்கில் தெப்பத் திருவிழா வருவதால் உடனடியாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தடுப்புச் சுவரை கட்டி முடிக்க வேண்டும் என நீதி அரசர் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் தடுப்புச் சுவரை கட்டுவதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டர் சென்னை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சென்னை ஆணையர் உத்தரவு வழங்கினார். அதன்படி இன்று தடுப்புச் சுவரை கட்டும் பணியை துவங்கினர். தெப்பத் திருவிழாவிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தெப்பக்குள தடுப்புச் சுவரை விரைந்து கட்டுவதற்கு அதிகாரிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பெயரில் பணியானது விரைவாக நடைபெற்று வருகிறது.



