கோவை, ஜூலை 16 –
கோவை மாவட்டம் கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு குறித்து சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ. சுகுமார், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்றிரவு அவர் கணியூர் பகுதிக்குச் சென்றபோது, கட்சியினர் இடையே கூட்ட நெரிசலில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. சுகுமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான நமது கட்சியின் சார்பில் இந்தத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றதற்காக, ஒவ்வொரு கிராமமாகச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். அதன்படி நேற்றிரவு கணியூர் கிராமத்திற்குச் சென்றபோது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. எனக்கு மாலை அணிவிக்கும் போது கூட்ட நெரிசலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறினர்.ஆனால்,நான் அந்த இடத்தைக் கடந்து சுமார் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எனக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நான் திரும்பி வருவதாகக் கூறினேன். ஆனால், பிரச்சினை முடிந்துவிட்டது என்று அவர்கள் கூறியதால் நான் பயணத்தைத் தொடர்ந்தேன். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூட்ட நெரிசலில் எதிர்பாராமல் தள்ளப்பட்டதால் ஏற்பட்ட வலியின் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கலாம். அங்கு அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவுகளில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்ததையடுத்து அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்.தற்போது அந்தப் பெண்ணிடம் பேசி விசாரித்தோம்.
அவருக்குத் தொண்டை வலி இருப்பதாகவும், இரண்டு நாட்கள் கழித்து நேரில் வந்து சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு கூட்டத்தோடு கூட்டமாக அவர் வருவார். மற்றபடி அவர் என்னை நேரில் சந்தித்துப் பேசியதில்லை. இருப்பினும் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்து தருவதாகக் கூறியுள்ளேன். இந்தச் சம்பவத்தை வைத்து, கட்சியில் ஏதோ கோஷ்டிப் பூசல் இருப்பது போன்ற மாயையை உருவாக்கவும், தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தவும் சிலர் முயற்சிக்கின்றனர். கட்சியில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை,எல்லாம் வழக்கம் போல் சீராகச் சென்று கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.



