திருப்பத்தூர், ஆக. 12 –
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடு தேடி சென்றடைய செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்குச் சென்று அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சர் தாயுமானவர் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (12.08.2025) பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் வட்டம் பெரியகண்ணாலப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு இத்திட்டத்தினை வரவேற்று, “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்” கீழ் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர்.
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34, 809 நியாய விலை கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்டு 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,454 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவரதம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னணும் எடைத்தராசு e-pos இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களை பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் உபயோகிப்பார்.
மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில்” 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருட்களை நியாய விலை கடையில் சென்று பெறுவது என்பது மிகவும் சிரமமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 18,543 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலமாக 23,106 பயனாளிகள் பயன் பெற உள்ளனர். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் 257 வாகனங்களின் மூலம் அந்தந்த தொடக்க வேளாண்மை நியாய விலை கடைகளுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்திற்கான உணவுப் பொருட்கள் இன்றும் (12.08.2025) மற்றும் நாளை (13.08.2025) இரண்டு நாட்களில் விநியோகம் செய்யப்படும்.
திருப்பத்தூர் வட்டம், காக்கங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் பெரியகண்ணாலப்பட்டி நியாய விலை கடையில் உள்ள 37 குடும்ப அட்டைதாரர்களுக்கும், சின்ன கண்ணாலப்பட்டி நியாய விலை கடையில் உள்ள 30 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆக மொத்தம் 67 குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரிய கண்ணாலப்பட்டி திரளிலிருந்து (Cluster) பொருட்கள் வாகனத்தில் கொண்டு சென்று அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் முதல் மாதம்தோறும் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டத்தின் மூலம் வீடுகளை தேடி நியாயவிலை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு மற்றும் சகோதரிகளுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 15 லட்சம் பட்டாக்கள் தாய்மார்களின் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மகளிர் பெயரில் மாதத்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்ட மகளிர்களிடமிருந்து, முகாம் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடியல் பயணம் திட்டத்தின் மூலமாக மகளிர்கள் இலவசமாக பயணம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 70 வயதிற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடியாக இல்லத்திற்கு சென்று நியாய விலை பொருட்களை விநியோகம் செய்யப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரையில் அன்பு சகோதரிகள் தாய்மார்கள் ஆரோக்கியமாக நலமுடன் இருக்க வேண்டும் என்று இதுபோன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறார்கள். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்றைய தினம் அரசு பணிக்காக டெல்லி சென்றிருந்தார். நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை எனது தொகுதியில் காக்கங்கரை பகுதியில் தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்கும்போது நாளை பெரியகண்ணாலப்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிச்சயமாக கலந்து கொள்வேன் என்று தெரிவித்தார். நம்முடைய மாவட்டத்திற்கும் எனது தொகுதி மக்களுக்கும் பணியாற்றக் கூடிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு என்னுடைய சார்பாகவும், தொகுதி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய குழு துணைத்தலைவர் மோகன் குமார், ஆத்ம குழு தலைவர் முருகேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் தர்மேந்திரன், கோகிலா, வட்ட வழங்கல் அலுவலர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.



