திருப்பத்தூர், ஆக. 6 –
திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல் துறையினருக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் முன்னாள் ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநர் (ஓய்வு) தேவாரம் தலைமையில் மலர் வளையம் வைத்து வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து கொண்டனர். மேலும் வீரமரணம் அடைந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 45-ம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழங்க அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) அசோக்குமார், சென்னை வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தர்மராஜ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், காவலர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் காவல் துறை சார்ந்த அதிகாரிகள், கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



