நாகர்கோவில், ஜூன் 29 –
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூர் அடுத்த கண்ணம்பி விளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்கம் (60). தென்னை கதம்பை லோடு ஏற்றும் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சிங்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.
அதே பகுதியை சேர்ந்த லிங்கசாமி (49) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு சிங்கம், லிங்கசாமி மற்றும் சிலர் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் மது அருந்திய இடத்தில் சிங்கம், லிங்கசாமி இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதில் லிங்கசாமிக்கு கல்லால் தாக்கி கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. சிங்கத்தின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. பின் தலையிலும் காயம் இருந்தது. இது குறித்து உடனடியாக ஈத்தாமொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தொடர்ந்து மாவட்ட எஸ்பி (பொ) திவ்யா, கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் ஈர்த்தாமொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் கிடைத்ததும் அவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் திரண்டனர். இதை அடுத்து அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். இரண்டு பேர் கொலைக்கான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. மொத்தம் 4 பேர் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. 2 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 பேர் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு பேரும் ஒரே சமயத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதால் யாருக்கு யார் ஆதரவாக பேசி இந்த கொலைகள் நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. கொலையாளிகள் சிக்கினால் தான் இதற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.



