திருச்சி, ஜூலை 14 –
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகி நந்தகுமாருக்கு ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயத்தில், தனியார் பள்ளிகளுக்கான தகுதி அங்கீகாரத்தை (Recognition) வழங்குவதற்கு பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாக நந்தகுமார் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களுக்கு அவர் தொடர்ச்சியாக நேர்காணல்களையும் அளித்திருந்தார்.
எவ்வித ஆதாரமும் இன்றி, தன் மீதும் அரசு மீதும் அபாண்டமாகப் பழிசுமத்தி, நற்பெயருக்கு திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் நந்தகுமார் செயல்படுவதாக அன்பில் மகேஸ் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய அவதூறுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவெடுத்துள்ள அவர், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் மூலமாக நந்தகுமாருக்கு இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
அன்பில் மகேஷ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த வக்கீல் நோட்டீஸில் பின்வரும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 48 மணி நேரத்திற்குள், தன் மீது சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக நந்தகுமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
பேட்டிகளை நீக்க வேண்டும்: ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் அன்பில் மகேஸின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நந்தகுமார் அளித்த அனைத்து அவதூறு பேட்டிகளையும் உடனடியாக நீக்க (Delete) வேண்டும்.
ரூ.50 கோடி இழப்பீடு: திட்டமிட்டு நற்பெயரைக் கெடுக்க முயன்றதற்காக ரூ.50 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்.
இது குறித்துப் பேசிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக அரசுப் பள்ளிகளை மறுசீரமைப்பு செய்து, அதன் தரத்தை உயர்த்திய பெருமைக்குரியவர் அன்பில் மகேஸ். அத்தகைய நற்பெயர் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி மீது, அரசியல் உள்நோக்கத்தோடு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவரது நன்மதிப்பைக் கெடுக்க நந்தகுமார் முயன்றுள்ளார்” என்று சாடினார்.
குறிப்பிட்டபடி 48 மணி நேரக் கெடுவுக்குள் நந்தகுமாரிடமிருந்து முறையான பதிலோ அல்லது நிபந்தனைகளுக்கான உரிய தீர்வுகளோ வரவில்லை எனில், அடுத்தகட்டமாக அவர் மீது நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நோட்டீஸில் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.



