மார்த்தாண்டம், அக். 24 –
மார்த்தாண்டம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் குளத்தில் மீன் லாரி கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து மழை பெய்தது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு லாரி மார்த்தாண்டம் வந்தது. இன்று காலை மீன்களை மீன் மார்க்கெட்யில் இறக்கிவிட்டு டிரைவர் காக்கி நாடாவைச் சேர்ந்த கிருஷ்ணன் (50) லாரியை மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு செல்லும் பாதையில் குறும்பேற்றி கோயில் அருகில் உள்ள நல்லூர் நல்லிக்குளம் அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்த பகுதியில் நிறுத்துவது வழக்கம்.
தொடர்ந்து பெய்த மழையால் குளத்தின் பக்க சுவர் இடிந்து மீன் லாரி குளத்துக்குள் கவிழ்ந்தது. குளத்தில் அதிகமான தண்ணீரும் காணப்பட்டது. அப்பொழுது லாரியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கிரெயின் மூலம் இந்த லாரி தூக்கப்பட்டது.



